சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டம், மாநகராட்சியின் மேயர் ஆ.இராமச்சந்திரன் தலைமையில் இன்று 31-05-2023 நடந்தது. மாநகராட்சி 34 -கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ பேசியதாவது:
சேலத்திற்கு பெருமை சேர்க்க கூடிய ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைக்கவும், ஒரு லட்சம் பயனாளர்களுக்கு நல உதவிகள் வழங்கவும் வரும் ஜுன் 11-ம் தேதி சேலம் வருகை புரியும் நல்லாட்சி நடத்தி வரும் நம் ஒப்பற்ற தலைவர் “திராவிட மாடல் நாயகர்” தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரை சேலம் மக்கள் சார்பிலும் 34 -வது கோட்டத்தின் சார்பிலும் வருக வருக என்று பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பிரமாண்ட வரவேற்புக்கு 34 -வது கோட்டத்தில் தயாராகி இருக்கிறோம்.
உலகில் யாராலும் திருட முடியாத ஒரே சொத்தாக திகழும் “கல்வி அறிவில்” தமிழகம் சிறப்புற்று திகழ வேண்டும் என பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறை மூலமாக நல்ல பல திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் எண்ணதிற்கு வலு சேர்க்கும் விதமாக, சேலம் மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அதிக தேர்ச்சி சதவீதம் தந்த ஆசிரியர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அனைத்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களையும் அழைத்து, அவர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டி பரிசு வழங்கிய வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சியின் மேயர் ஆ.இராமச்சந்திரன் -க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குப்பைகளை அதிக அளவில் தேவையற்று உருவாக்கி பொறுப்பற்ற முறையில் பொது இடங்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது அவர்களின் இந்த தவறான செயல்பாட்டை மாற்றும் முயற்சியாக அதிக அளவில் அபராதம் விதிக்க அனைத்து கோட்டங்களிலும் குறியீடு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்.
உணவு பொருட்களை சாக்கடைகளில் சிலர் கொட்டுவதால் பெருகி வரும் சாக்கடை எலிகளால் அதன் பொந்துகள் பல வீடுகளில் உருவாகின்றன. அவற்றை மக்கள் அடைக்காமல் விடுவதன் விளைவாக அதிக எலிகள் உருவாகி சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் விதமாக பல இடங்களில் சாக்கடை கால்வாய்களை அடைக்க செய்யும் அளவு மண் குவியலை உருவாக்கி தள்ளி விடுகின்றன. இதனை தடுக்க பொதுமக்கள் வீடுகளில் உருவான எலி பொந்துகளை முழுமையாக சரியாக அடைக்க அத்தகைய இடங்களுக்கு சென்று மாநகராட்சி சுகாதார பிரிவினர் அறிவுறுத்த வேண்டும்.
மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பு, பாதாள சாக்கடை குழாய் மற்றும் வீட்டு இனைப்பு தரும் பணி 24X7 குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைக்கும் பணி ஆகியவற்றை ஒரே நேரத்தில் தொய்வின்றி சிறப்பாக ஒருங்கினைத்து செயல்படுத்த கண்கானிப்பு அலுவலர்களை (nodal officer) நியமித்து அவர்களிடம் 15-தினங்களுக்கு ஒரு முறை கள நிலை அறிக்கை பெற்று பணிகளை சரியான முறையில் மேற்கொண்டு நிறைவு செய்ய ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு ஈசன் இளங்கோ (34-வது கோட்ட மாமன்ற உறுப்பினர்) பேசினார்.

