நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதுபோல, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் திருமுருகன் காந்தி, சீமான் ஆகியோரது அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் டுவிட்டர் கணக்குகளும் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் டுவிட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்து டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்போராட்டம் நடத்தி டுவிட்டர் கணக்குகள் மீட்க்கப்படும் என்று அவ்வமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

