குஜராத்தில் 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு 9,268 பெண்களும், 2020-ம் ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய் உள்ளனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர். இந்தத் தகவல்கள், என்.சி.ஆர்.பி. என்று சொல்லப்படக்கூடிய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டவை ஆகும். அந்த மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, குஜராத்தில் பெண்கள் காணாமல் போகும் எண்ணிக்கை சராசரியாக ஆண்டிற்கு – 8324, மாதத்திற்கு – 693, ஒரு நாளைக்கு – 23 என்று ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் சொல்கிறது.
இதையொட்டி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினருமான சுதிர் சின்கா கூறும்போது, “காணாமல் போன பெண்களைப் பொறுத்தமட்டில், சிறுமிகள் மற்றும் பெண்கள் என சிலர் எப்போதாவது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதையும் நான் கவனித்துள்ளேன்” என கூறி உள்ளார்.

