சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகர் முழுவதும் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் “கிண்டிக்கு ஒரு கேள்வி…? கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்த உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை மத்திய பாஜக அரசில் உள்ள 34/77… 44% அமைச்சர்களை பதவியில் இருந்து விலகச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா கிண்டி…?’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் மத்திய மந்திரிகள் சிலரின் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னதாக சென்னையில் நேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வந்த போது, செய்தியாளரின் கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
கேள்வி: அமைச்சர் செந்தில் பாலாஜி-யை அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கியுள்ளாரே?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்” என்றார்.
சு.வெங்கடேசன் எம்பி.,
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் டுவிட்டர் பதிவில், ‘’அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். கவர்னரே! உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்! அத்து மீறலை அனுமதிக்காது தமிழ்நாடு’’ என்று கூறியுள்ளார்.

