மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.215 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம்“ கட்டடத்தின் தொடக்க விழா தொடர்பான தயார் நிலை குறித்து ஜூலை 5 அன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி – பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் – டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் ஒத்துழைப்போடு மிகக்குறுகிய காலத்திலேயே கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான கட்டுமானப் பணிகள் தரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது இந்நூலக கட்டுமானப் பணிகள் மட்டும் ரூ. 134 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், புத்தகங்கள், மேஜை, நாற்காலி இருக்கை கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள், கணினிகள் என மொத்தம் ரூ.215 கோடி மதிப்பீட்டில் நூலகத்திற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி வருகின்ற ஜூலை 15 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார்கள். அன்றைய தினம் பெருந்தலைவர் காமாராஜர் அவர்களின் பிறந்த தினம் என்பது கூடுதல் சிறப்பு.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலைஞர் தென்பகுதி வளர்ச்சிக்கும், மதுரை மாவட்டத்திற்கும் செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு பேசினேன். தென்பகுதி மக்கள் தங்களது வழக்குகளை தீர்த்துக்கொள்வ தற்காக சென்னை உயர்நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு அலைச்சல், பண விரயம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைப்பதற்கு கலைஞர் மிகவும் பாடுபட்டார்.

மதுரை உயர்நீதிமன்றத்திற்கான கட்டிடத்தை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை குறிப்பிட்டு பேசும் பாது ”கலைஞரின் கொடை” என்று குறிப்பிடுவதற்கு பதிலாக உணர்ச்சி மிகுதியால் வேறொரு வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். நீதிமன்றங்கள் மீதும், நீதிபதிகள் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக நான் பயன்படுத்திய வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக எனது வருத்தத்தை தெரி வித்துக் கொள்கிறேன்.
மதுரை நகரில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் கோரிப்பாளையம், மேலமடை (அப்போலோ சந்திப்பு) பகுதிகளில் 2 மேம்பாலங்கள் அமைப்பதற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். மெட்ரோ ரயில் திட்டத்தினால் கோரிப்பாளையம் மேம்பாலம் அமைப்பதில் எவ்வித பாதிப்பும் இல்லை. அதேபோல, நெல்பேட்டைப் பகுதியில் பாலம் அமைப்பதற்கும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் நெல்பேட்டைப் பகுதியில் பாலம் அமைப்பதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது வியாபாரத்தளங் கள் அகற்றப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பலர் மனு அளித்தார்கள். இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ததின் அடிப்படையில் நெல்பேட்டைப் பகுதியில் பாலம் கட்டுவதற்கு மாற்றாக நெரிசல் ஏற்படும் பகுதிகளில் தேவைக்கேற்ப பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் மதுரை முனிச்சாலை பகுதியில் பழைய கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன்-க்கு முழு உருவசிலை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி. சந்திர மோகன், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, (மதுரை வடக்கு), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

