கர்நாடக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த பிரவீன் சூட், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.
தற்போதைய சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பணிக்காலம் மே 25 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து பிரவீன் சூட் பதவியேற்க இருக்கிறார். முன்னதாக காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்து வருவதாகவும், கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை பாதுகாக்கும் பணியில் பிரவீன் சூட் ஈடுபட்டு வருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவவர் டிகே சிவகுமார் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தியாவில் சிபிஐ இயக்குனரை பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய குழு நியமனம் செய்து வருகிறது. சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம், இரண்டு ஆண்டுகள் ஆகும். இதனை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
இமாச்சலபிரதேசத்தில் 1964-ம் ஆண்டு பிறந்த பிரவீன் சூட், டெல்லி ஐஐடி-யில் படித்த பிடெக் சிவில் என்ஜினியர் ஆவார். 1986-ம் ஆண்டு, கர்நாடக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இங்கு, மாநில சட்டம் ஒழுங்கு துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி பழுத்த அனுபவம் கொண்டவர்.
கர்நாடக சட்டசபை பொதுத்தேர்தல் முடிந்த நிலையில் கடந்த சனிக்கிழமை, சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமிக்கப்படுவது உறுதியானது. டெல்லியில் மே 25 ம் தேதி புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

