தலைமைச் செயலாளரும் பயிற்சித் துறைத் தலைவருமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்தியத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்தியக் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இனவாரியாகவும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் கடந்த 56 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்கு முழுநேரமாக 76 ஆர்வலர்கள் இம்மையத்தில் பயிற்சிப் பெற்றனர். முதன்மைத் தேர்வில் வெற்றிப் பெற்ற ஆர்வலர்களின் திறன்களை மேம்படுத்தவும், முனைப்புடன் ஆளுமைத் தேர்வினை எதிர்கொள்வதற்கும். 02.01.2023, 03.01.2023 ஆகிய நாட்களில் இப்பயிற்சி மையத்தில், ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு குழுவிலும், கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் ஓய்வுபெற்ற / பணியிலிருக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள். பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல் மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை கவனமுடன் பரிசீலனை செய்கிற உளவியல் நிபுணர்கள் போன்ற வல்லுநர்களைக் கொண்டு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட்டது.
இம்மாதிரி ஆளுமைத்தேர்வில், 46 ஆர்வலர்கள் முனைப்புடன் பங்கேற்றனர். தற்போது, புதுதில்லியில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வில், இப்பயிற்சி மைய ஆர்வலர்களில், 19 ஆர்வலர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர் என்றும், இவர்களில் 8 பெண் ஆர்வலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மையத்தில் சேர https://civilservicecoaching.com/ என்ற இணையத்தில் வரும் அறிவிப்புகளை பார்க்கவும்.

