’’யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு படிக்க (எம்.டி) ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டிலுள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, சென்னை மற்றும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு, 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான எம். டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை ”www.tnhealth.tn.gov.in” என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு ”www.tnhealth.tn.gov.in” என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 21.07.2024 முதல் 05.08.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 05.08.2024 மாலை 05.30 மணி வரை.
விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கவேண்டிய முகவரி: ”செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106.”
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தின் தேர்வுக்குழுவால், நடத்தப்படும் நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே எம். டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும்.
தற்காலிக நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், சென்னை – 600 106 அவர்களால் www.tnhealth.tn.gov.in” என்ற வலைதள முகவரியின் மூலமாக பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வர வேண்டும்.
கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும். கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: 3000/- ரூபாய். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ். பி. ஐ. இ-சேவை வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும்.
கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், தபால்/கூரியர் சேவையினால் ஏற்படும் காலதாமதத்திற்கு தேர்வுக்குழு பொறுப்பாகாது.

