விடுதலை 89-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விடுதலை களஞ்சியம் தொகுதி (1) வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 01.06. 2023 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினார்.
விடுதலை களஞ்சியம் தொகுதி ஒன்றினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, முதல் நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஏராளமான தோழர்கள் வரிசையாக மேடைக்கு வந்து நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
அறிவுப் பெட்டகமாக 1936 இல் தொடங்கி விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரைகள், செய்திகள், துணுக்குகள் அனைத்தையும் தொகுத்து இளம் தலைமுறையினருக்கு அருட்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கி இருக்கிறார். இது போன்ற பணிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மட்டும்தான் செய்ய முடியும் அனைத்தையும் ஆவணப்படுத்துதல், தொலைநோக்கு பார்வையோடு அதனை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது என்பது ஆசிரியர் அவர்களது மகத்தான பணிகள்.

இளையோர்களே வியக்கும் வண்ணம் துடிப்போடும், முனைப்போடும் ஆசிரியர் கி.வீரமணி எப்படி இந்த பணியை செய்ய முடிகிறது என்பதே நம்மை சிந்திக்க தூண்டுகிறது; ஊக்கத்தை, உந்துதலை தருகிறது. பகுத்தறிவுக் கருத்துகளை தாங்கிய இதழை நடத்துவது மிக கடினமான காரியம். அதனை தொடர்ந்து நடத்தி, புதிய இளைய தலைமுறையினருக்கு பொறுப்புணர்வோடும், அவர்களை அறிவியல் மனப்பான்மையோடு வளர்த்தெடுக்கும் பணியாக இதை செய்திருக்கிறார்.
வரலாற்றில் பல திரிபுகளை, அவதூறுகளை, வதந்திகளை எதிர் தரப்பினர் பரப்பக்கூடிய சூழ்நிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு பாதுகாப்பு; மிகப்பெரிய நல்வாய்ப்பு. 89 ஆண்டுகால விடுதலைக்கு 61 ஆண்டு ஆசிரியராக இருந்து உலக சாதனையை ஆசிரியர் படைத்திருக்கிறார். இந்த சாதனைக்காகவே தனியாக ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது என்று ஆய்வரங்கமே நடத்த வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வளவு முக்கியமானது. மக்களவை தலைவர்கள் முன் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை நிச்சயம் வைக்க வேண்டும். செங்கோல் வைக்க வேண்டிய இடத்தில் அரசமைப்புச் சட்ட முகவுரை இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக தமிழர் தலைவரும், தளபதி அவர்களும், ஜனநாயக சக்திகளும் இருக்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிஜேபியை வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் பெரியார் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகிறார். இந்தியா முழுவதும் பரவ வேண்டிய கருத்து பெரியார் கருத்தாக இருக்கிறது. பிஜேபி கட்டியமைக்க நினைப்பது இந்து ராஷ்டிரமல்ல பிராமண ராஷ்டிரா. தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களத்திலும் மூன்றாவது குழலாக விடுதலைச் சிறுத்தைகள் உடன் இருக்கும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

