தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் 11.07.2023 அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டன. மேலும், பத்திரிகையாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதற்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான படிவங்கள் ஒப்புதல் பெறப்பட்டது மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருண்மைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது “தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அரசு பொறுப்பேற்ற பிறகு பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலினை செய்து நிரந்தரமாக தீர்வு ஏற்படுகின்ற வகையிலும், அதனை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையாளர் நல வாரியத்திற்காக அரசு எடுத்து வரும் ஆக்கபூர்வமான பணிகளுக்கு நீங்களும் உதவியாக இருக்கிறீர்கள். இந்தக் கூட்டத்தின் மூலம் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிற பல்வேறு பொருள்கள் அனைத்தும் விரைவில் பரிசீலிக்கப்படும். மேலும், கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள், ஏழைக் குடும்பத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்கக்கூடிய வகையில் நிச்சயம் நடைமுறைபடுத்தப்படும்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 293 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 61 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம், உதாரணம் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்ற பத்திரிகையாளர் நல வாரிய அலுவல்சார் மற்றும் அலுவல்சாரா உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசு கூடுதல் செயலாளர் மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், இ.ஆ.ப., பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், பி.கோலப்பன், தலட்சுமி சுப்பிரமணியன், எஸ்.கவாஸ்கர், எம்.ரமேஷ் அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

