முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 22.05.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில் 12 தலைப்புகளில் குழுக்கள் அமைத்து, நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, “இதழாளர் – கலைஞர்” என்ற தலைப்பிற்கான குழு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் 26.06.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநரும், உறுப்பினர் செயலருமான த.மோகன், மற்றும் உறுப்பினர்களான நக்கீரன் கோபால், திரு.விஜய் சங்கர், பாபு ஜெயக்குமார், கோவி.லெனின், மு.குணசேகரன், செந்தில்வேலன், அருண் ராம், இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் முத்தமிழறிஞர் கலைஞர் பங்கு மிகவும் அளப்பரியது என்று போற்றினார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் பன்முக ஆற்றலையும், மக்களுக்காக செயல்படுத்திய நலத்திட்டங்களையும் வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் “இதழாளர் – கலைஞர்” எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்தியாளர் சந்திப்பு, செய்தியாளர்களுடனான தனிப்பட்ட கலந்துரையாடல் போன்ற அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
எனவே, ஊடகவியலாளர், பொதுமக்கள் தங்களிடம் மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் ஏதேனும் அரிய புகைப்படங்கள் இருப்பின், அவற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக புகைப்படக் கண்காட்சியில் இடம்பெறும் வகையில், அப்புகைப்பட நகல் ஒன்றை jdmemorials@gmail.com எனும் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

