பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அல்லது புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்திய அரசு, ஜனவரி 1, 2004 முதல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தியது. ஆனால் 01. 01. 2004-க்கு முன் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எனும் புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது.
இந்நிலையில், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. இந்திய அரசைப் பின்பற்றி பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004-க்குப் பிறகு பணியில் சேரும் தமது ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தி வருகிறது
இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023 ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 26.05.2023 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது. அத்துறையின் ‘’cps.tn.gov.in/public’’ என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

