அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா அறிக்கை:
அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்…
உங்கள் ஊடகப் பேட்டியை பார்த்தேன். தங்களை மிக மோசமாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் சிவாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உங்கள் கோபம் மிக நியாயமானது.
பொதுவெளியில் இயங்கும் பெண்களை அவதூறாகப் பேசுவதையோ இழிவுபடுத்துவதையோ ஒருபோதும் அனுமதிக்கக் முடியாது. அப்படிப்பட்ட கயவர்களுக்கு சட்ட ரீதியாக அவர் சார்ந்திருக்கிற கட்சியின் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாதர் சங்கமும் வலியுறுத்தி வருகிறது.
இன்னும் கூட ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கற்பு குறித்து நீங்கள் தெரிவித்த ஒரு கருத்திற்காக தமிழகம் முழுவதும் சங்கிகள் குறிப்பாக பாஜக தலைவர் எச்.ராஜா உங்கள் மீது சேற்றை வாரி இறைத்தது போல விஷமத்தை கக்கியபோது அதற்கு எதிராக முதல் எதிர்ப்புக்குரல் கொடுத்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.
துரதிஷ்டம் பாருங்கள் இப்போது அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள்.
ஆனால் அன்றும் இன்றும் என்றும் பெண்களை இழிவுபடுத்த ஆபாசமாக பேசும் எந்த ஒரு செயலையும் யார் செய்தாலும் எந்த சமரமும் இன்றி முதல் எதிர்ப்புக் குரலை கொடுப்பது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்பதை நாடறியும்.
ஆனால் உங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய அதேவேகத்தில் உங்களிடம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போது அமைதியாகவே கடந்து போனீர்கள்.
டெல்லியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் நீங்கள் பொறுப்பு வகிக்கும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசன் சரண் சிங் என்ற கயவனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தபோதும் நீங்கள் இது குறித்து பேச மறுத்துவிட்டீர்கள்.
தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தில் முன்னெடுத்த பெண்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் பதில் இருக்காது என்பது நன்கு தெரியும்.
ஏனென்றால் நீங்கள் சாந்திருக்கும் பாஜக எந்தக் காலத்திலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் கட்சி அல்ல.
எல்லாவற்றிலும் சுய லாபம் தேடும் பாஜகவில் அங்கம் வகிக்கும் உங்களைப் போன்றோரின் நாடக அரசியலை மக்கள் நன்கு அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.


