விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார் பெருந்தலைவர் காமராஜர் என்று அழைக்கப்பட்ட கு.காமராஜ். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளி படிப்பைத் தொடர முடியாத காமராஜர் அவரது மாமாவின் துணிக்கடையில் பணிபுரிந்தார்.
கல்விக்கண் திறந்த காமராஜர்:
படிக்காத மேதையான காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். மெட்ராஸ் மாகாணத்தின் மூன்றாவது முதலமைச்சராக 1954 ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். அதில் இருந்து 1963 ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். கல்வியே அனைவரையும் முன்னேற்றும் என்பதால் இலவச கல்வியை அறிமுகப்படுத்தினார். படிக்க சென்று விட்டால் வயிற்று பொழப்பிற்கு எங்கே செல்வது என்ற நிலை குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்தது. இதனை போக்க மதிய உணவு திட்டத்தினையும் பள்ளிகளில் கொண்டு வந்தார். அது மட்டுமல்லாமல் அனைவருமே சமம் என்ற எண்ணத்தை மாணவ, மாணவிகளிடம் கொண்டு வர சீருடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். ஓவ்வொரு ஊரிலும் பள்ளிக்கூடட்ம் இருக்க வேண்டும் என்று பள்ளிபடிப்புக்காகவே 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து வைத்தார் காமராஜர்.
காமராஜரின் திட்டங்கள்:
ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையான ஒன்று உணவு. விவசாயமே அதற்கு தீர்வு என்பதால் விவசாயம் மேலோங்கி நிற்க மேட்டூர் கால்வாய் திட்டம், பவானி திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்வள திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அணைகளை கட்டி, நீர் வழித்தடங்களையும் வெட்டி விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். வானம் பார்த்த வறண்ட பூமிகளை வளமாக்கினார். வேலையின்மையைப் போக்க நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணுமின் நிலையம், ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலி பிரிண்டர் என பல தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் உருவாக்கினார்.
எளிமை மாறாத காமராஜர்:
தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சர் பதவியில் இருந்தும் வாடகை வீட்டில் வசித்து, கதர் ஆடையையே உடுத்திய அரசியல் தலைவர். நம் நாட்டின் வளர்ச்சி இளைஞர்களிடம் உள்ளது என்பதால் தனது முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். கட்யில் இருக்கும் மற்றவர்களும் ஆட்சி நிர்வாகத்திற்கு வர வேண்டும் என்றும் அதற்கு தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் முதலமைச்சர் பதவியை துக்கி ஏறிந்தார். கட்சி பணிக்கு திரும்பினார். காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய தலைவராக இருந்து, நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியை வழி நடத்தினார். படிக்காத மேதை காமராஜர், நாட்டின் மூன்று பிரதமர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கும் ஆற்றல் மிக்க அதிகாரத்தை பெற்றிருந்தார். பிரதமர் இந்திரா காந்தியோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கட்சியில் இருந்து வெளியேறினார். உடல்நலக்குறைவால், அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
பொற்கால ஆட்சி
தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார். இவற்றையெல்லாம் வலியுறுத்திய காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, அவர் பிறந்தநாளில் மறைந்து அவரோடு இரண்டறக் கலந்துவிட்டார். காந்தியத்தின் கடைசித் தூண்களுள் ஒன்று சாய்ந்துவிட்டது என்று கூறுவது மிகவும் பொருத்தமாகும். வாழ்நாளில் தனக்கென்று எந்த சொத்தையும் அவர் சேர்த்ததில்லை. ஆனால், நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பொற்கால ஆட்சி நடத்தி, அடித்தளம் அமைத்த பெருமை காமராஜருக்கு உண்டு. அதன்மூலம் தமிழ்ச் சமுதாயம் அடைந்த பயன்கள் ஏராளம். அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவுகூரப்படுகிறார். காமராஜர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது புகழும், பணிகளும் மக்கள் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும்..!
– தே. சுகன்யா

