வாட்ஸ்அப் எண் ஓகே.. அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் வேறு எப்படியெல்லாம் புகாரளிக்கலாம்? முழு லிஸ்ட்
தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம். இதற்கான பிரத்யேக செல்போன் எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர பிற முறைகளிலும் பொதுமக்கள் புகாரளிக்கலாம்.அது எப்படி? என்பது பற்றி இங்கு முழுமையாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பேசும்போது கூட, ”பொதுமக்கள் பணத்தில் ஒரு ரூபாய் தொடமாட்டேன். யாராவது தொட்டால் விடமாட்டேன். தொடவும் விடமாட்டேன்” என்று பேசினார்.
அதேபோல் கரூரில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் பேசும்போது, ”யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்காதீங்க” என்று பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார். குறிப்பாக அந்த வகையில் தற்போது முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி லஞ்சம் கேட்கும் ஊழியர்கள், அதிகாரிகள் மீது பொதுமக்கள் 94981 80936 என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் புகார்அளிக்கலாம். புகார் அளிக்கும் நபரின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பல அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் பணியை மேற்கொள்ள லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்பது போன்ற விழிப்புணர்வு வாசக பலகைகளை வைக்க வேண்டும் என்று அனைத்து அரசு துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்பும் இதுபோன்று பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும் கூட பல இடங்களில் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் கட்டாயமாக இதனை பின்பற்றும் வகையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதில் இந்த வாட்ஸ்அப் எண் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதள முகவரி உள்பட பிற விவரங்களை இடம்பெற செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் இ-மெயில் வழியாகவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளிக்கலாம். அதன்படி dvac@nic.in
என்ற இ-மெயில், இல்லாவிட்டால் தொலைபேசி எண் 044-22321090, 22321085, 22310989, 22342142
உள்ளிட்டவற்றை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதுதவிர நேரடியாக சென்றும் அல்லது தபால் மூலமாகவோ புகார் அளிக்க முடியும். அதன்படி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை, எண் 293, எம்கேஎன் சாலை, ஆலந்தூர், சென்னை 600 016 என்ற முகவரிக்கு சென்று நேரில் அல்லது தபால் மூலமாக புகார் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் எஸ்.கிரினிவாச பிரசாத்
