Madras Murasu

Census 2027

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு, திரிபுராவில் சுயகணக்கெடுப்பு தொடக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு, திரிபுராவில் சுயகணக்கெடுப்பு தொடக்கம்

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டத்தின் கீழ், வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பிற்கான சுய கணக்கெடுப்பு வசதி, தமிழ்நாடு, திரிபுரா ஆகிய மாநிலங்களில் இன்று (17.07.2026) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டு மாநிலங்களிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த வசதி 2026, ஜூலை 31 வரை பயன்பாட்டில் இருக்கும். அதனைத் தொடர்ந்து, 2026, ஆகஸ்ட் 1 முதல் 30 வரை வீடு வீடாகச் சென்று களக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு, திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், அதிகாரப்பூர்வ சுய கணக்கெடுப்பு இணையதளமான se.census.gov.in மூலம் சுய கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். சுய கணக்கெடுப்பை மேற்கொள்ளும் குடும்பங்கள், தங்களால் உருவாக்கப்பட்ட சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை தயாராக வைத்திருக்கவும், வீட்டு இருப்பிடக் கண்காணிப்பு செயல்முறையை எளிதாக்குவதற்காக, அடுத்தகட்ட களப்பயணத்தின்போது அதனை கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையில், கேரளத்திலும் நாகாலாந்திலும் வீட்டுப் பட்டியல், வீட்டுவசதி கணக்கெடுப்பின் களப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை 2026 ஜூலை 30-ம் தேதி வரை தொடரும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டம் 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளது.

பொது மக்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயல்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்கவும், களப் பயணங்களின் போது கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Scroll to Top