’’எகிப்தில் முதன் முதலில் தோன்றிய நைல் நதி நாகரீகம் போன்று, இந்தியாவின் தெற்கில் தாமிரபரணி நாகரீகமும் மிகவும் தொன்மையானது’’ என்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் சபாநாயகர் மு.அப்பாவு பேசினார்.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, எகிப்து தலைநகர் கெய்ரோவில் 27.9.2023 அன்று அந்நாட்டு செனட் சபையின் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.
அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் 66 வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மாநாட்டில் இந்திய வட்டாரப் பிரதிநிதிகளின் செயலாளராக தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் பங்கேற்கிறார்.
முன்னதாக, எகிப்து, தென் ஆப்ரிக்க நாடுகளில் பேரவைத் தலைவர் ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி, பேரவைத் தலைவர் 26.9.2023 அன்று துபாய் வழியாக எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார்.
கெய்ரோவில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு 27.9.2023 அன்று அந்நாட்டின் செனட் துணை சபாநாயகர் பாஹா எல்டின் ஸுக்கா (Bahaa El-Din shukka), தலைமையில் நடைபெற்ற செனட் சபையின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். இக்கூட்டத்தில், அந்நாட்டின் செனட் செகரட்டரி ஜெனரல் முகம்மது இஸ்மாயில் இட்மேன் (Mahmoud Ismail Etman), இந்திய தூதர் அஜித் குப்தா, அசாம் சட்டப் பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் டைமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசுகையில், ‘’எகிப்தில் முதன் முதலில் தோன்றிய நைல் நதி நாகரீகம் போன்று, இந்தியாவின் வடக்கில் சிந்துசமவெளி நாகரீகமும், தெற்கில் தாமிரபரணி நாகரீகமும் மிகவும் தொன்மையானது. அதே போல், தொன்மையான மூன்று மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்த பழமையான மொழி இன்றும் இளமையுடன் உள்ளது. நாளையும் இது தொடரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வருகின்றன. அதே போல, காலநிலை மாற்றத் தாக்கத்தை குறைத்திடவும், வனங்களை பாதுகாத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியாக கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்’’ என்று குறிப்பிட்டார்.