மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும், அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும், உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை எடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாக்குவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018-2019 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் நகரத்தால் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசு காசோலையாகவும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதில் ஐந்து ஆசிரியர்கள் தமிழ்வழிப் பள்ளிகளில் இருந்தும் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் திறந்தநிலைப் பிரிவிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்படுவர்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான பின்வரும் ஐந்து துறைகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கணிதம்
இயற்பியல்
வேதியியல்
உயிரியல் மற்றும்
புவியியல் / கணினிஅறிவியல் / வேளாண்நடைமுறைகள்
விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் முறையான வழியாக அனுப்பப்பட வேண்டும், அதாவது சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டு அறிவியல் நகர அலுவலகத்திற்கு 14.09.2023 அல்லது அதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்று அறிவியல் நகரம் துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.